கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.
தில்லி கலால் கொள்கை மோசடியில், மார்ச் 21ஆம் தேதி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார், நாட்டிலேயே, ஆளும் மாநில அரசில், ஒரு முதல்வர் கைது செய்யப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்ட செயல்முறைகளை தாம் ஊக்குவிப்பதாக அமெரிக்கா தெளிவுபடுத்தியிருந்த அடுத்த நாளில், இந்திய மக்களவைத் தேர்தல் குறித்து ஐக்கிய நாடுகளின் கருத்து வெளிவந்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கடந்த புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பின்போது, இந்தியாவில், பொதுமக்களிடையே பிரசாரம் செய்வதற்கு சவாலாக இருக்கும் வகையில் வருமான வரித் துறை காங்கிரஸ் கட்சியின் சில வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாக எழும் குற்றச்சாட்டுகள் வாஷிங்டனுக்கும் தெரியும் என்று பதிவு செய்திருந்தார்.
இதற்கு பதில் அளித்திருந்த இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் ரந்திர் ஜெய்ஸ்வால், மில்லரின் கருத்து தேவையற்றது என்று தெரிவித்திருந்தார்.
நமது நாட்டில் நடைபெறும் தேர்தல் நடைமுறைகள் மற்றும் தவறுகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் வெளிநாட்டுத் தலையீடு என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஜெய்ஸ்வால் தெரிவித்திருந்தார். இந்தியாவில், சட்ட நடவடிக்கைகள் அனைத்துமே, சட்டத்திட்டங்களுக்கு உள்பட்டே செயல்படுத்தப்படுகிறது என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.