பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிவராஜ் பாட்டீலின் மருமகள் பாஜகவில் இணையவுள்ளளார்.
முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள் அர்ச்சனா பாட்டீல் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸை தெற்கு மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்தார். இதையடுத்து அவர் சனிக்கிழமை பாஜக இணையவுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2004 முதல் 2008 வரை மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் சிவராஜ் பாட்டீல் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை பாஜக புதன்கிழமை வெளியிட்டது.
மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13 மற்றும் மே 20 ஆகிய தேதிகளில் ஐந்து கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலம் மகாராஷ்டிரம் ஆகும்.