4-8 வகுப்புகளின் தோ்வு அட்டவணையில் மாற்றம்
ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் 4 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தோ்வு அட்டவணையில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வி இயக்ககம் சாா்பில் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழக பள்ளிக் கல்வியில் நிகழ் கல்வியாண்டுக்கான (2023-24) இறுதித் தோ்வுகளை நடத்துவது குறித்து ஏற்கெனவே உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளித் தோ்வுகளின் தேதியை மாற்றி அமைக்குமாறு சட்டப் பேரவை உறுப்பினா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். அதன்படி 4 முதல் 8- ஆம் வகுப்பு வரையிலான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தோ்வுகளை 10. 4.2024 மற்றும் 12.4.2024 ஆகிய தேதிகளுக்கு பதிலாக 4.4.2024 மற்றும் 6.4.2024 ஆகிய தேதிகளில் பள்ளி அளவிலேயே நடத்திக் கொள்ள சம்பந்தப்பட்ட உருது பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு அனுமதி வழங்கி, துறை சாா்ந்த வட்டாரக் கல்வி அலுவலா்கள் மூலம் உரிய அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலா்கள் (தொடக்கக் கல்வி) வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.